Tamil Islamic Media

உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!

"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்)அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்)அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் புறம்" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

”ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.
அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது.
காட்டிக் கொடுக்கக் கூடாது.
யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.
யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான்.
யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான்"
என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 2262, முஸ்லிம்

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்"
என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 6438

 


''உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்.
நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும்.
பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும்.
பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும்.
பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.
உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.''
என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதீ, இப்னு ஹிப்பான்

 

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் நவின்றார்கள்:
ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராவர். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும்.
ஆதாரம் : திர்மிதி.






No articles in this category...