Tamil Islamic Media

யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?

                      (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
 
வலிமார்களும்,நாதாக்களும்,மகான்களும்,நல்லோர்களும் வாழ்ந்து மறைந்துள்ள புண்ணிய பூமிகளில் ஆடம்பரங்களும்,அனாச்சாரங்களும்,கொலைகளும்,கொள்ளைகளும் தலைவிரித்து தாண்டவமாடுகிறது.
 
சம உரிமை என்னும் பெயரில் பெண்ணியத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகள் நாகரீகம் என்னும் போர்வையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
 
நடுரோட்டில் ஒரு ஆணும்-பெண்ணும் முத்தம் கொடுப்பது நாகரீக கலாச்சாரமாம்.அதை சட்டமாக்க வேண்டுமென்பதற்காக வீதி தோறும் முத்த போராட்டமாம்.
 
ஆண் இனத்தின் விலங்கினங்களை கண்டால் கூட வெட்கப்பட்டு தன்னை மறைத்துக்கொண்ட மாண்புயர் தாய்மார்கள் வாழ்ந்த ஊர்களில், இன்றைய கால பெண்களின் ஒழுக்கம் கிலோ என்ன விலை என்று கேட்க தோன்றுகிறது?
 
சின்னஞ்சிறிய ஊர்களில் கூட மாணவர் சமுதாயமே மது,ஹெராயின்,கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தும் அவலநிலை உருவாகியுள்ளது.
 
அமைதி தவழும் புண்ணிய பூமிகளில் வெடிகுண்டு புரளிகள் பீதியை ஏற்படுத்துகிறது.வட்டி என்னும் நரககுழியின் விஷ நாகம் வீடுகள் தோறும் வறுமை என்னும் இழிச்சொல்லில் நுழைந்து விட்டது.
 
மனித குலத்திடம் ஒழுக்கம் குறைந்து ஒழுங்கீனம் மேலோங்கி நிற்கிறது.போட்டிகளும்,பொறாமைகளும்,கோள் மூட்டுதலும்,அமானித அபகரித்தலும் வளர்ச்சியின் அடையாளமென கருதப்படுகிறது.
 
இதயத்தில் அமைதியும் வாழ்வில் நிம்மதியும் உள்ள மனிதரை காண்பது அரிதாகிவிட்டது.அடுத்தவரை கொன்றாவது பணமென்னும் பொருள் ஈட்டும் முயற்சியில் கலப்பட உணவுப்பொருட்களை வியாபார சந்தையாக்கும் ஈனப்பிறவிகள் பெருகி விட்டனர்.
 

இவைகள் அனைத்தையும் வேதனையுடன் உற்று நோக்கும் எனது நெஞ்சத்தின் கேள்வி இதுதான்: "யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?"






No articles in this category...