Tamil Islamic Media ::: PRINT
யார் தேச விரோதி?
முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தார்கள். சங்க பரிவாரம் அவர்களுடன் இணைந்து நின்றது. யார் "தேச விரோதி"? (Who is “anti-national”?)   - A.G.நூரானி.
 
// காந்தி னே அஸ் ஜங் க ஐலான் கர்தியா... என்ற பாடல் 
 
தமிழில்: 
 
காந்தி யுத்த பிரகடனம் செய்துவிட்டார்.
 
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போர்  துவங்கிவிட்டது.
 
அது இந்தியர்களின் இதயத்தில் புது உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது.
 
பூரண சுதந்திரத்திற்கான பாதையை அவர் தயார் செய்துவிட்டார்.
 
இறைவன், மனிதர்களின் நீதிபதி, அவனுடைய அருளால் மகாத்மாவை நம் வழிகாட்டியாக தேர்வு செய்துவிட்டார். //
 
இந்த கிளர்ச்சியூட்டும் கவிதையை எழுதியவர் மவ்லானா அலி கான், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அவர் இதை எழுதினார். அவர் சரியாக அவதானித்தார்: "வோ தின் ஆனேகோ ஹே....... " - அந்த நாள் விரைவில் வரப்போகிறது அன்று இந்தியா சுதந்திரமாக இருக்கும். இந்த உலகமே அவளை வாழ்த்தும், வெற்றி விருந்தைக் கொண்டாடும். (K.C. Kanda, Masterpieces of Patriotic Urdu Poetry, Sterling Publishers, New Delhi,)
 
சங்க பரிவாரமோ அதன் கிளைகளான - இந்து மகாசபா மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS) - இயக்கங்களோ இதுபோன்ற இந்திய தேசியவாதத்தையும் அதன் ஈடில்லாத பன்மைத்துவ கலாச்சரத்தையும்  உள்ளடக்கிய ஏதுனும் ஒரு கவிதையை தங்களின் உறுப்பினர்கள் எழுதியதாகக் காட்ட முடியுமா?
 
இந்திய சுதந்திர இயக்கமானது தன்னுடைய எல்லா சமூகங்களின் உற்சாகமான பங்களிப்பால் செழுமை பெற்றிருந்தது: இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்சிகள், இன்னும் பல சமூகத்தினரின் பங்களிப்பும் நிறைந்திருந்தது. தத்தமது உரிமைகள் மற்றும் மத சீர்திருத்தங்களுக்கு மத்தியிலும் கூட அனைவருமே இந்தியா விற்காக பேசினார்கள்.
 
சங்க பரிவாரம் மத சீர்திருத்தகத்திற்கான இயக்கம் அல்ல, மாறாக அரசியல் ஆதிக்கமும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதையும்  மதத்தின் பெயரால் செய்யும் இயக்கம்.
 
RSS இயக்கம், முன்னாள் காங்கிரஸ்காரரான கேஷவ் பலிராம் ஹெட்கேவர் ஆல் துவங்கப்பட்டது. நாகபூரில் 1925  ஆம் ஆண்டு செப்டம்பர் இல் விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்டது. அன்று முதல் அதன் வளர்ச்சியின் போக்கு போதுமான அளவு அறிந்தாகிவிட்டது. ஆனால் மிக அடிப்படையில் ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது, அதற்குரிய முக்கியத்துவத்துடன் கூர்மையாக அது எதிர்கொள்ளப் பட்டுவிட்டதா என்றால் இல்லை. எதற்காக இந்த பூமியில் RSS கட்டமைக்கப்பட்டது? இந்த கேள்விக்கான பதிலே அதன் இத்தனை கால வளர்ச்சிப் போக்கை தெளிவாக விளக்கிவிடும். 
 
நினைவிருக்கிறதா, காந்தியின் தலைமையில் காங்கிரஸ் முன்னெடுத்த சுதந்திர இயக்கம் 1925 இல் அதன் உச்ச்சத்தில் இருந்தது. அப்போது தனித்து இயங்கிய தாராளவாதிகள்  (Liberals) புது யுக்தியாக இருந்த  ஒத்துழையாமை போராட்ட வழிமுறையை  ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக சட்டரீதியான வழிமுறைகளை முன்வைத்தார்கள். தேசபக்தர்கள் (patriots) ஆக இருந்த பகத் சிங் போன்றவர்கள் இரண்டையும் நிராகரித்ததோடு, வன்முறை போராட்ட முறைகளை தேர்வுசெய்தார்கள்.
 
ஏன் ஆர்.எஸ்.எஸ் (RSS) ?
RSS ஏதோ இந்த மூன்று போராட்ட குழுக்களையும் அல்லது அந்த போராட்ட முறைகளையும் ஏற்றுக் கொள்ளாததால் அமைக்கப்பட்ட மற்றொரு சுதந்திர போராட்ட இயக்கம் அல்ல. சுதந்திர போராட்டத்திற்கு வலுவும் வேகமும் சேர்ப்பது அதன் நோக்கமும் அல்ல. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் முடிவில் இந்து தேசத்தை உருவாக்குவது என்ற கொள்கையை பரப்புவது தான் அதன் நோக்கமாகும்.
டெல்லியில் நடந்த இந்து மஹா சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் 
V.D.சாவர்க்கர் (முன் வரிசையில் இடமிருந்து நாலாவது)  Photo:THE HINDU ARCHIVES
அதற்காக அது கையாண்ட யுக்தி, பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதோடு , அதன் ஆட்சியாயாளர்களுடனானன எந்த மோதலையும் கவனமாக தவிர்த்துக் கொள்வது. அவ்வாறு செய்வதன் மூலம், சுதந்திர போராட்ட இயக்கத்தின் தோழமையிலிருந்து விலகி இருந்ததோடு மட்டுமல்லாமல், அதை RSS எதிர்க்கவும் செய்தது. இதையே தான் "இந்து மஹா சபா" வும் செய்தது. இவை இரண்டுமே இந்திய தேசியவாதத்தை அதன் துவக்கத்திலேயே எதிர்த்தது. அதன் கரு, அதன் சித்தாந்தம், அதன் மதசார்பற்ற, ஜனநாயக கோட்பாடு அனைத்தையும் எதிர்த்தது. அதை ஏளனம் செய்தது, குறிப்பாக அதன் அடையாளமான தேசியக் கொடியை.
RSS அதனுடைய  சித்தாந்தத்திலும்  யுக்திகளிலும் இயல்பாக, உளப்போர்வமாக இயங்கியது. இந்திய தேசியவாத கோட்பாட்ட்டிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டதோடு, "இந்து தேசியவாதம்"  என்பதை ஆதரித்தும் பிற சமூகங்களை தாழ்வாக காட்டியும் - முக்கியமாக முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்கள் க்கு எதிரான வெறுப்பையம்  பரப்பி வந்தது. இந்த யுக்தியை இன்றுவரை வெறித்தனமான ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறது. RSS இயக்கம் ஒருபோதும் பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டதில்லை. அது சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டது.
 
RSS ஐயும் அதன் அரசியல் இயக்கங்களான ஜன் சங் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்தியாவை  முன்னேற்றப்பாதையில் திருப்பும் என்று நம்பியவர்களின் எதிர்பார்ப்புகள் வீணானது என்பதை இது நமக்கு தெளிவாக விளக்குகிறது. அவர்கள் அடிப்படையில் எதற்க்காகவீற்றிருக்கிறார்களோ அந்த நோக்கத்தையே அவர்கள் இழக்க வேண்டும்.
 
இது தான் மீண்டும் அந்த முக்கிய கேள்வியை நம் முன் நிறுத்துகிறது - RSS ஏன் , எதற்காக அமைக்கப்பட்டது? ப்ரலே கனுங்கோ (Pralay Kanungo), ஒரு தீவிர ஆய்வாளர், இவர் RSS உருவான சூழலை 
திறமையாக பதிவு செய்கிறார்:" 1923 முதல் 1928 வரையான காலகட்டம் வட இந்தியாவில்  'இந்து வகுப்புவாத மறுமலர்ச்சியின் சகாப்தம்' என்று விளக்கப்படுகிறது. அதில் ஆர்யா சமாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஷுத்தி' (தூய்மைப் படுத்தல்) என்பது பதினொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆர்யா சமாஜின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது சுவாமி ஷ்ரத்தானந்த தலைமையில் அந்த பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அவரது மதமாற்று கொள்கை இந்துமதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களையும் மற்றும் முஸ்லீம்களிலேயே இந்து காலகாரங்களை உள்வாங்கிகொண்ட சில குழுக்களையும் குறிவைத்தே இருந்தது...... இத்தகைய இனவாத மோதல்களுக்கிடையிலான பரபரப்பான சூழலில், புதிதாக ஒரு இந்து அமைப்பு நாகபூரில் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று ஒற்றை இந்து தேசம் (sangathan ideology) சித்தாந்தத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்டது. இதன் நிறுவனர் Dr. கேஷவ் பலிராம் ஹெட்கேவர். அந்த நிகழ்வில் பங்குபெற்றிருந்த மேலும் நால்வர், Dr.B.S.மூஞ்சே , Dr.L.V. பரன்ஜபி , Dr.B.B. தால்கர் மற்றும் பாபாராவ் சாவர்க்கர். அதைத்தொடர்ந்து அந்த இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெயர் "ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (RSS)" (RSS’s Tryst with Politics, Manohar, pages 35, 36 and 38) .
"ஹெடகவரின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது V.D. சாவர்க்கர் கைப்பட எழுதிய 'ஹிந்துத்துவா'. அது ஹிந்துக்கள் ஒரு தேசம்  என்ற கருத்தை முன்வைத்து எழுதப்பட்டது."(Walter K. Andersen and Sridhar D. Damle, The Brotherhood in Saffron, page 33). ஹெட்கேவர் க்கு ஒரு குரு இருந்தார்,, அவர் மூஞ்சே. குறிப்பாக, இவர் மார்ச் 1925 இல் சாவர்க்கரை நேரில் சந்தித்திருந்தார், RSS ஐ நிறுவுவதற்கு சிறுது காலம் முன்பு நீண்ட விவாதங்களுக்காக இந்த சந்திப்பு நடந்தது.
 
RSS ஒருபோதும் பிரிட்டிஷாரின் விரோதியாக இருக்கவில்லை
 
மிக  கவனமாக பதியப்பட்ட 'Hindu Nationalism (Oxford, New York)' இல் லண்டன் பல்கலைக் கழகத்தைசார்ந்த சேத்தன் பட் குறிப்பிடுகிறார்: "காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி இயக்கங்களும் அவற்றின் நடவடிக்கைகளும் வன்முறை ரீதியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டும், தடைசெய்யப்பட்டும், பெருமளவில் சிறையில் அடைக்கப்பட்டும் வந்த போதும், RSS ஒருபோதும் பிரிட்டிஷாரால் தங்களின் எதிரியாக கருதபடவில்லை. மாறாக, அது காவல் படையின் ஒரு அங்கமாகச் செயல்படுவதாக பிரிட்டிஷாருடன் விசுவாச ஒப்பந்தம் செய்திருந்தது. RSS பிரிட்டிஷாரால் தடை செய்யப்படவில்லை ஆனால் இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டது.  ஹெட்கேவர், கோவல்கர் இருவருமே காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முனைப்புடன் எதிர்த்து வந்தார்கள். தங்களின் "இந்து தேசத்திற்கு சேவை செய்கிறோம்" என்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சிக்கு உதவியாக இவ்வாறு செய்தார்கள்."
 
"இதைப் போன்றே RSS, தங்கள் நிறுவனத்தின் வெளிப்படையான கொள்கையை எல்லாம் ஒரு காரணமாகக் காட்டி, சுதந்திரப் போராட்டங்களில் சேர மறுத்தது. ஒத்துழையாமை இயக்கம், காலனி ஆதிக்கத்திற்கெதிராக 1920 மற்றும் 1940 இல் நடந்த  சத்யாக்ரஹங்கள் , சட்ட மறுப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் பம்பாயில் நிகழ்ந்த கடற்படை சிப்பாய் கலகம் என எந்த போராட்டங்களிலும் இணைய மறுத்தது RSS..."
 
RSS உருவாக்கத்திற்கான சற்றே வெளிப்படையான காரணம், ஹெட்கேவரின் கருத்தாகும். ஹெட்கேவரின் கருத்து யாதெனில், முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கும் வேளையில் இந்துக்கள் பல கூறுகளாக பிரிந்தும், பலகீனமாகவும் இருக்கிறார்கள் அதனால் அவர்களை போர்குணமுள்ள ஒன்றுபட்ட ஆக்ரோஷமான சக்தியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்பதாகும். 1920 இன் துவக்கத்தில் இருந்த அரசியல் சூழல் குறித்த ஹெட்கேவரின் கருத்து இவ்வாறு இருந்தது: "ஒத்துழையாமை இயக்க போராட்டங்களின் போது இருந்த எழுச்சி இப்போது மாய்ந்து விட்டது. அதில் கலந்துகொண்ட தீயசக்திகள்  செல்வாக்கு பெற்றுள்ளது. பரஸ்பரம்  நம்பிக்கையின்மையும், தீங்கு நாடுதலும் , தனிப்பட்ட மற்றும் சாதிய விரோதமும், பிராமணர் - பிராமணரல்லாதோர் என்ற சர்ச்சையும் எல்லாம் தலை தூக்கியுள்ளது . எந்த ஒரு நிறுவனமோ  அமைப்போ இந்த குழப்பங்களை சந்திக்காமல் இல்லை, அவை ஒழுக்கமில்லாமல் இருக்கின்றன. ஒத்துழையாமை இயக்கங்கள் முஸ்லீம் வெறித்தனம் எனும் பாம்புக்கு பால் வார்த்தது, அது இப்போது தன விஷப்பல்லை காட்டுகிறது. அது தன் விஷத்தைப் பரப்பி நாடுமுழுவதும் வன்முறையும் கலவரத்தையும் பரப்புகிறது."
 
சேத்தன் பட் சொல்கிறார் : " 'சுயத்தை இழந்த இருண்ட காலம்' - காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இருந்த காலத்தை ஹெட்கேவார் இவ்வாறு வர்ணிக்கிறார். இந்த காலத்தில்  இந்துக்கள் மத்தியில் 'ஒற்றுமையும் சுயமரியாதையும்' இல்லாததே அவர்களின் முக்கிய பிரச்சினை என்று ஹெட்கேவர் உறுதியாக நம்பினார். " (pages 115 and 117). இந்தக் கருத்து அந்த மாபெரும் இந்து சமுதாயத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைத்தது, அதுதான் இன்றுவரை RSS ஆல் பரப்பப்பட்டு வருகிறது.
 
RSS அதன் வழியில் சரியாக முன்னேறிச் சென்றது. ஒரு சுயசரிதை நூல் இவ்வாறு பதிவு செய்கிறது:" சங்க பரிவாரம் அமைக்கப்பட்ட பிறகு டாக்டர் சாஹேப் தன்னுடைய உரைகளில் இந்து அமைப்புகள் பற்றி மட்டுமே பேசி வந்தார். அரசுக்கு எதிராக துளியும்  பேசுவதில்லை. " (C.P. Bhislikar, Sanghavariksh Ke Beej/ Dr. Kashaavrao Hedgewar. This official biography in Hindi deserves translation into English. Excerpts in English are quoted in Dr Shamsul Islam’s Hindu Nationalism and Rashtriya Swayam Sevak Sangh published by Media House, Delhi, 2015, and his pamphlet Know the RSS, published by Pharos Media, Jamia Nagar, New Delhi, 2017.)
 
மற்றொரு சுயசரிதை நூல் இவ்வாறு பதிவு செய்கிறது: " இந்து முஸ்லீம் ஒற்றுமை விவகாரத்த்தில் காந்தி ஒரு பக்க சார்புடன் நடந்து கொண்டார் என்பது தெளிவாக தெரிகிறது... ஆனால் டாக்டர் ஜி அதன் அபாயத்தை உணர்ந்துகொண்டார். உண்மையில் அவர் புதிதாக உதித்துள்ள 'இந்து முஸ்லீம் ஒற்றுமை' என்ற முழக்கத்தை குறித்து சந்தோஷப்படவில்லை. "(Quoted in Shamsul Islam, Hindu Nationalism and RSS, page 207).
 
இது மிகத் தெளிவாக காட்டுகிறது. RSS ஆல் முஸ்லிம்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக எந்த ஒரு போராட்டத்தையும் பிரிட்டிஷுக்கு எதிராக முன்னெடுக்க முடியாது. RSS செய்வதெல்லாம் பிரிட்டிஷ் உடன் நேரடியா துணை நின்று, ஆட்சியாளர்களை மரியாதை செய்து, பாதுகாப்பாக அதிகாரத்திற்குள் நுழைந்து அதன் மூலம் இந்து தேசம் (இந்து ராஷ்டிரா) வை உருவாக்குவது.

RSS சேவகர் நரேந்திர மோடி 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து செய்ய முயல்வதெல்லாம் இழந்த காலத்தை (1947-2014) மீட்டெடுப்பதே. அத்தோடு முறையாக, படிப்படியாக அந்த மட்டமான முடிவை நோக்கி நகர்வது. ஆகவே தான் அவர் அதன் ஆதரவாளர்களின் தவறான செயல்களின் மீது அழகாக மௌனம் காக்கிறார். பராக் ஒபாமா ,மிச்சல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் அனைவருமே ஹார்வே வெய்ன்ஸ்டனின் நண்பர்கள் தான் (ஹார்வே வெய்ன்ஸ்டன் - பலமுறை பாலியல் குற்றத்திற்கு உள்ளான சினிமா தயாரிப்பாளர்) . ஆனால் அவர்கள் ஹார்வே வை பொதுவெளியில் கண்டித்து பேசினார்கள் குறிப்பாக அவருடைய குற்றங்களிலிருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதற்காக. அதைப் போன்று மோடி அவரை பின்பற்றுபவர்கள் விஷயத்தில் அவ்வாறு நடந்து கொள்ள முடியவில்லை. RSS ம் மோடியும் ஒருவரமீதொருவர் மோசமான தேவையுடையவர்கள். கொடூரமான அரவணைப்பில் பின்னிப் பிணைந்துள்ளனர்.
 
ஒரு நூற்றாண்டு கால சாதனை தான் RSS ஐ இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. 1939 இல் இந்தி - மராத்திய மொழிகளில் இருந்ததை சமஸ்கிருதத்திற்கு மாற்றி அறிமுகம் செய்யப்பட அவர்களின் வழிபாட்டுப்பாடல் இதை நன்றாக வெளிப்படுத்துகிறது:
" அன்பின் தாய்நாடே, உன்னை உளமார வணங்குகிறேன் / இந்துக்களின் பூமியே. நீ என்னை ஆறுதலுடன் நிமிர்ந்து நிற்கச் செய்தாய். / புனித பூமியே. நன்மைகளின் தோற்றுவாயே, என் உடல் உனக்கு சமர்ப்பணமாகட்டும்/ நான் மீண்டும் மீண்டும் உன் முன் சரணடைகிறேன். / கடவுளே. இந்து தேசத்தின்உறுப்புகளான நாங்கள் உன்னை பயபக்தியுடன் வணங்குகிறோம்."
 
ஒவ்வொரு உறுப்பினர்களும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி : "சர்வ சக்தியும் படைத்த அந்த கடவுளும் எங்கள் முன்னோர்களும் சாட்சியாக, இந்த உறுதிமொழியை எடுக்கிறேன். பாரத தேசத்தின் எல்லா உயர்வையும் புனித மிக்க இந்து மதம், இந்து சமூகம், இந்து கலாச்ச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அடைவதற்காக ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் (RSS) இன் உறுப்பினராக இணைக்கிறேன். சங்க பரிவாரத்தின் கடமைகளை நேர்மையாகவும், சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டும் செய்வேன். மேலும் இந்த உறுதிமொழியை இறுதிவரை உறுதியாககாப்பேன். பாரத் மாதா கி ஜெ! " (D.R. Goyal, Rashtriya Swayamsewak Sangh, Radhakrishna Prakashan, Daryaganj, New Delhi, pages 247-249; an able work). லத்தியை பயன்படுத்தி அறிவுரை வழங்குவதும் "கூட்டு வழிபாடு" இன் ஒரு பகுதியாகும்.(Andersen and Damle, page 35)
 
தலைவனை வழிபடுதல்
 
1925 இல் இதை உருவாக்கிய அந்த ஐந்துபேரும், புதிதாக பிறந்துள்ளதற்கு ஒரு பெயரைக் கூட சிந்தித்திருக்க வில்லை. ஆனால் 1926, ஏப்ரில் 17 ல் (ராம் நவமி அன்று) தான் பெயர் சூட்டப்பட்டது (RSS) . ஹெட்கேவர் அதிகாரப்பூர்வமாக அதன் முக்கியத் தலைவராக (சாலக்) நியமிக்கப்பட்டார். அந்தப் பசி முற்றிப்போய், மூன்றே ஆண்டுகளில் அவர் தன்னை RSS இன் சர்வாதிகாரியாக ஆக்கிக் கொண்டார். 
 
"நாகபூரில் நடந்த சங் தலைவர்கள் கூட்டத்தில்  [நவம்பர் 9-10,1929], தலைவர் ஹெட்கேவார், இந்த இயக்கம்  இனி சுய கட்டுப்பாட்டுடன் ஒற்றைத் தலைவருக்கு கீழ் தான் இயங்க வேண்டும், அவரே அனைத்து நிகழ்வுகளுக்கும் மூளையாகச் செயல்படுவார்". என்ற கட்டளையை பிறப்பித்தார். ஹெட்கேவாருக்கு இதுவே அமைப்பின் ஒரே கொள்கையாக இருந்தது, இதை 1933 ஆண்டில் அவர்களின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் காண முடியும்: "ஒவ்வொரு சுவயம்சேவக் கும் 'சாலக்' இன் ஒவ்வொரு கட்டளைகளுக்கு உறுதியாக கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். சங் ஒருபோதும், வால் தலையை மிஞ்சும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.  அதுதான் சங்க பரிவாரத்தின் வெற்றியின் ரகசியம்". இந்த கீழ்ப்படிதல் என்பது சில காலத்தில் தலைமை வழிபாடாக மாறிவிட்டது. உண்மையில், நவம்பர் 1929 க்கு உள்ளாகவே  இது நடைமுறைக்கு வந்துவிட்டது. அப்போது நாகபூரில் நடந்த RSS இன் நிறைவான கூட்டத்தில், ஹெட்கேவருக்கு 'பிரணாம்' அதாவது  இராணுவ வடிவில் மரியாதை செலுத்தப்பட்டது, அனைத்து உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்."  (Shamsul Islam, page 213). இந்த பாசிச கலாச்சரம் இன்றுவரை தொடர்கிறது.
 
பிரிட்ஷுடன் ஒத்துழைப்பு 
 
காங்கிரஸ் கண்டிக்கப்படவேண்டும் , முஸ்லிம்கள் தோலுரிக்கப்படவேண்டும் என்றிருக்க, சங்க பரிவாரம் (அதாவது RSS உம் இந்து மஹா சபா வும்) எஞ்சியிருக்கும் ஒரே வழியை தேர்வு செய்தது  
 - அதுதான் பிரிட்டிஷ் உடன் ஒத்துழைப்பது.
 
"கோவல்கர், RSS ஐ தடை செய்ய பிரிட்டிஷ் அரசுக்கு எந்த ஒரு காரணத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது என்று எண்ணினார். இராணுவ பயிற்சியையும் சீருடை முறையையும் பிரிட்டிஷ் அரசு தடை செய்த போது, RSS அதை ஏற்றுக் கொண்டது. 1943 ஏப்ரல் 23 தேதியில் RSS மூத்த உறுப்பினர்களுக்கு கோவல்கர் ஒரு சுற்றறிக்கை விடுகிறார், அதில்: 'அரசின் முந்தய ஆணையில் தடை செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி மற்றும் சீருடை நடைமுறைகளை நாம் நிறுத்தி வைத்திருந்தோம். நம்முடைய பணிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும் என்பதற்காக. சட்டத்திற்குட்பட்டு இயங்கும் எந்த ஒரு இயக்கத்திற்கும் அது  கடமையாகும். சூழ்நிலைகள் விரைவில் சரியாகும் என்ற எதிர்பார்ப்பில் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால் இப்போது, காலமாற்றத்திற்காக காத்திருக்காமல் அந்த பயிற்சி துறையையே முழுமையாக கைவிட முடிவு செய்துள்ளோம்.' என்று கூறியுள்ளார்."
 
"பொதுவாகவே கோவல்கர் ஒரு புரட்சியாளராக இருக்கவில்லை. இதை பிரிட்டிஷார் நன்கு புரிந்து வைத்திருந்தனர்.  1943 இல் RSS ன் நடவடிக்கைகள் குறித்து அன்றய உள்துறை தயாரித்த அறிக்கையில் 'RSS சட்ட ஒழுங்கிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருக்கிறது  என்று வாதிடுவது கடினம் ...' என்று முடிவு செய்தது. 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வன்முறை போராட்டங்கள் குறித்து பாம்பே உள்துறை இவ்வாறு சொல்கிறது: 'சங் பரிவாரம் ஒழுங்காக தன்னை சட்டத்தின் வரையறைக்குள் வைத்துக் கொண்டது. மேலும், குறிப்பாக ஆகஸ்ட் 1942 இல் வெடித்த கலகங்களில் இருந்து விலகியே இருந்தது....'." (Andersen and Damle, page 44).
 
சாவர்க்கரின் பல பரிதாபகரமான மன்னிப்புக் கோரல்கள் எல்லாம் நாம் அறிந்ததே:
 
1. ஜூலை 4, 1911 இல் அந்தமான் சிறைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த ஆண்டின் முடிவிற்குள்ளாகவே அவர் கருணைக்காக மன்றாடினார்.
 
2. 1913 இல், பிரிட்டிஷ் அரசு விரும்பும் எந்த பதவியிலும் அரசுக்கு சேவை செய்ய விருப்பத்தை முன்வந்தார். இதையே அவர் 1914 மற்றும் 1917 மீண்டும் செய்தார்.
 
3. மார்ச் 30, 1920 இல் மீண்டும் ஒரு கருணை மனுவை தாக்கல் செய்தார். (Frontline, April 8, 2005).
 
4. ஜனவரி 6, 1924 இல் அவர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார். அதாவது ஐந்தாண்டுகளுக்கு, "ரகசியமாகவோ வெளிப்படையாகவோ எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் அரசின் ஒப்புதலின்றி ஈடுபடக் கூடாது ". இந்த நிபந்தனை 1937 வரை நீட்டிக்கப்பட்டது.
 
5. பிப்ரவரி 22, 1948 இல், காந்தி கொலைவழக்கில் கைதாவதை தவிர்க்க, அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பம்பாய் காவல்துறை ஆணையருக்கு  உறுதிமொழி அளித்தார்.
 
6. ஜூலை 13, 1950 இல், மற்றொரு உறுதிமொழியையும் வழங்கினார். இந்தமுறை பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு. அதிலும், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி அளித்தார்.

இரண்டாம் உலகப்போர், பரிவாரத்தின் இரண்டு முக்கியத் தலைவர்களின் முகத்ததிரையை கிழித்தது. அக்டோபர் 9, 1939 இல் சாவர்க்கர் பம்பாயில் வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ (Viceroy Lord Linlithgow)  வை சந்திக்கிறார். சாவர்க்கர் முன்வைத்த சலுகையை அவர் இவ்வாறு பதிவு செய்கிறார்: 'இந்த சூழல், அதாவது அவர் (சாவர்க்கர்) சொல்கிறார்,  மேன்மைக்குரிய அரசு இனி இந்துக்கள் பக்கம் திரும்ப வேண்டும் மற்றும் அவர்களின் ஆதரவோடு செயலாற்ற வேண்டும் என்று. எல்லாவற்றிற்கும் மேல், கடந்த காலங்களில் எங்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே கடினமான சூழல் இருந்து வந்தது - இங்கிலாந்துக்கும் பிரஞ்சுக்கும் இருந்ததற்கு சமாக மேலும் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுவது போல ரஷியாவிற்கும் ஜெர்மனிக்கும் இருப்பது போன்ற உறவாக அது இருந்தது.  நம்முடைய விருப்பங்கள் இப்போது  ஒன்றாக இருக்கிறது அதனால் நாம் கூட்டாக செயல்பட வேண்டும். இப்போது அவர் மிகவும் மிதமான போக்குடையவராக இருந்தாலும், கடந்த காலத்தில் அவர் புரட்ச்சிகர இயக்கங்களின் அங்கமாக இருந்ததை நான் அறிந்து வைத்திருக்கிறேன். (நான் அறிந்திருக்கிறேன் என்பதை உறுதி படுத்தி கொண்டேன்). 
ஆனால் இப்போது நம்முடைய விருப்பங்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் இந்துயிசமும் இங்கிலாந்தும் நண்பர்களாக இருப்பது இன்றியமையாதது. பழைய விரோதங்கள் இனி தேவையில்லை."  (Marzia Casolari, The Shade of the Swastika, page 172)

S.P. முகர்ஜி யின் கடிதம் 
 
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் ஒரு பகுதி 
Photo:COURTESY: GANDHI SMRITI
 
இந்து மஹாசபா வின் முன்னாள் தலைவரும், RSS உடனான உடன்படிக்கையின் கீழ் ஜன்சங் ஐ தோற்றுவித்த ஷியாம பிரசாத் முகர்ஜிக்கே பாராட்டு செல்கிறது. அவர் டிசம்பர் 1941 இல், பஸுலுள் ஹக் தலைமையிலான வங்காள அமைச்சரவையில்  அமைச்சராக இருந்தார். 1940 இல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் தீர்மானத்தை வழங்கியவர் தான் பஸுலுள் ஹக் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமாக இயங்கி கொண்டிருந்த காலத்தில், வங்காளத்தின் ஏகாதிபத்திய ஆளுநர் சர் ஜான் ஹெர்பர்ட் க்கு எழுதிய கடிதத்தில் எஸ்.பி.முகர்ஜீ அவரின் இந்த முழுமையான சொற்களை உதிர்க்கிறார்: "நான் இப்போது மாகாணம் முழுவதும் காங்கிரசின் பரந்துபட்ட இயக்கங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சூழலை விவரிக்கிறேன். யாராக இருந்தாலும், ஒரு போர் காலத்தின் போது, மக்களின் உணர்வுகளை கிளறுவதும் அதன் மூலம் உள்நாட்டுக் கலகங்களையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்குவதை செயல்பட்டுவரும் அனைத்து அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்.... அந்த வகையில், இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளும், அவற்றிற்கிடையான போராட்டங்களும், இந்த போர் சூழலில் நடைபெறக் கூடாது. நடந்துவரும் போர், இந்தியா மீதான இங்கிலாந்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக  நடைபெறுவது அல்ல. ஏகாதிபத்தியத்தின் பழைய கருத்துக்கள் மண்ணோடு புதைக்கப் பட வேண்டும். தற்போதைய போரின் முடிவு எவ்வாறாக இருந்தாலும் அவை புதுப்பிக்கப் பட போவதில்லை......

"...வங்காளத்தில் இந்த இயக்கங்களை எப்படி எதிர்கொள்வது என்பதே கேள்வி? காங்கிரஸ் என்னென்ன முயற்ச்சிகள் செய்தாலும் இந்த மாகாணத்தில் அவர்களின் இயக்கங்கள் வேரூன்றா முடியாது என்பதை உறுதி செய்யும் பொருட்டு மாகாண நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். இது நம்மால் முடிய வேண்டும், குறிப்பாக பொறுப்புள்ள அமைச்சர்களுக்கு. நம்மால் மக்களுக்கு இதைச் சொல்ல முடிய வேண்டும், அதாவது எந்த சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸ் இந்த இயக்கத்தை துவங்கியதோ, அந்த சுதந்திரம் இப்போது மக்களின் பிரதிநிதிகளிடம் இருக்கிறது. சில கோணங்களில், அவசர காலத்தில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட தாக இருக்கலாம். இந்தியர்கள் இங்கிலாந்தை நம்ப வேண்டும். (S.P. Mookerjee, Leaves from a Diary, pages 179 and 183).வைஸ்ராயின் செயற்குழுவில் இந்து மகாசபா வின்  பிரதிநிதி ஒருவர் இருந்தார், சர் ஜுவால பிரசாத் ஸ்ரீவஸ்தவா.
 
 
பங்கிம் சந்திரா வின் பாரபட்சம் 
 
இந்த கூட்டணிக்கு சிந்தாந்த அடிப்படை மட்டுமல்ல சில தந்திரமான அடிப்படையும் இருக்கிறது. தன்னுடைய சுயசரிதை நூலில்  (An Unknown Indian) நீரத் C.சவுத்திரி, வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்ட சூழலை சரியாக விவரிக்கிறார்: "பங்கிம் சட்டர்ஜீக்கும் சந்திர தத் ற்குமான சரித்திர நெருக்கம்  முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்து கிளர்ச்சியை புனிதப்படுத்தியது. அத்தோடு முஸ்லிம்களையும் மோசமானவர்களாக சித்தரித்தது. சாட்டர்ஜீ நேரடியாகவே கடுமையான முஸ்லீம் விரோதியாக இருந்தார். நாங்கள் இந்த நெருக்கத்தை விரும்பி வாசித்தோம் , அவர்களின் இந்த மனநிலையை நாங்களும்   உள்வாங்கிக் கொண்டோம்."
 
வரலாற்றாய்வாளர் R.C. மஜூம்தார் பிதிலி அதை இவ்வாறு சொல்கிறார்: "பங்கிம் சந்த்ரா நாட்டுப் பற்றை மதமாகவும், மதத்தை நாட்டுப் பற்றாகவும் மாற்றினார்." எந்த நாவலுக்காக வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டதோ அந்த 'அனந்த மத்' நாவல் பிரிட்டிஷ் க்கு எதிரானதாக இருக்கவில்லை. அதன் கடைசி அத்தியாயத்தில், சன்யாசிகள், சத்யானந்த தலைவர்களை நோக்கி போராட்டத்தை நிறுத்திவிடச் சொல்லி சம்பாஷணை செய்யும் பகுதிகளை அதீத அளவில் நாம் பார்க்க முடியும். அதில் ஒரு சுவாரசியமான வசனம்: "அவர்: உங்கள் பணி நிறைவடைந்தது. முஸ்லீம் ஆட்சி அழிக்கப்பட்டுவிட்டது. வேறெதுவும் இனி செய்ய வேண்டியதில்லை.தேவையற்ற படுகொலைகளால் எந்த பயனும் இல்லை."
 
முஸ்லீம் விரோத குறிப்புகள் அந்த நாவல் முழுவதும் படர்ந்திருக்கிறது. ஜீவானந்தா வாளை ஏந்திக்கொண்டு கோவில் வாசலில் நின்று, காளியின்  பிள்ளைகளை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்: "நாம் இந்த முஸ்லீம் ஆட்சி என்னும் பறவைக் கூட்டை உடைக்க வேண்டும் என்று அவ்வப்போது எண்ணினோம். துரோகிகளின் நகரத்தை கீழடக்கி ஆற்றில் வீசிட - அந்த பன்றிகளை சாம்பலாக்கிட, தாய் பூமியை இந்த தீயசக்திகளற்றதாக மீண்டும் ஆக்கிட. தோழர்களே, அந்த நாள் வந்துவிட்டது." 
 
வந்தே மாதரம் பாடலை அந்த நாவலில் பயன்படுத்தியது தற்செயலானதல்ல. இது தெய்வமாக கருதப்படும் நாட்டிற்கு செய்யும் மத வழிபாடு. மஜூம்தார் சொல்வது போல அது "ஒரு வகையான வணக்கம்". தாய்நாடு "அனைத்து சக்திகளுக்கும் மகிமைகளுக்கும் ஆதியான கடவுள் காளி யாக கருதப்பட்டது".

அந்த பாடலிலும் இவ்வாறே கருதப்படுகிறது. கருத்து இன்னும் மோசமாகிறது. "வங்காள பூமி மற்றும் இந்தியாவின் அனைத்து நிலப்பரப்பும், பெண் கடவுள் காளி யாக கருதப்பட்டது, இதன்  முடிவு புனித தாய்நாடு என்ற கருத்துருவாக்கம்."  (India as a Secular State by Donald Eugene Smith, 1963, Princeton University Press) அத்தகைய பாடல் எப்படி மதசார்பற்றதாக இருக்கும்?
 
லஜபதிராய், மதன் மோகன் மால்வியா மற்றும் பலரும் இந்த பல்லவியை எடுத்துக் கொண்டனர். 1925 இல், RSS பிறந்த போது, லாலா ஹர்தயாள் Pratap of Lahore இல் இவ்வாறு எழுதினார்: "இந்துஸ்த்தானிலும் பஞ்சாபிலும் இந்து இனத்தின் எதிர்காலம் நான்கு தூண்களின் மீது அமைந்திருக்கிறது என்பதை நான் அறிவிக்கிறேன். 1.இந்து இயக்கங்கள் (சங்காதன்) 2.இந்து ராஜ்ஜியம் 3. முஸ்லீம்களை அழித்தொழிப்பது  மற்றும் 4. ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவது அதன் போராளிகளை அழிப்பது." சாவர்க்கரும் ஹெட்கேவரும் இதை அப்படியே உள்வாங்கிக் கொண்டனர். அதைத்தான் அவர்களின் வழித்தோன்றர்களான மோடி & கோ. வும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
 
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை 
 
1857 இன் கலகங்கள் குறித்து அசோக மேத்தா இவ்வாறு எழுதுகிறார்: "கிளர்ச்சியின் துவக்கத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகளவில் பங்குபெற்றார்கள்..... அடக்குமுறையின் கரங்கள் முஸ்லிம்கள் மீது கடுமையாகப் பாய்ந்தது... அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள்."  (1857, The Great Rebellion).
அசோக் மேத்தா ஒப்புக் கொள்வதை போன்று முஸ்லிம்களே அதிகமாக பாதிப்புக்குள்ளாகினர். இங்கிலாந்து அரசு அவர்களை தனிமைப் படுத்தி எல்லாவகையிலும் ஒதுக்கிவைத்தது. வங்காள பொதுத்துறை அதிகாரி W.W.ஹன்டர் , 'தி இந்தியன் முஸல்மான்ஸ்" (1871) இல் பதிவு செய்துள்ளார். இந்த வரிகள் அந்த காலத்தின் சூழலை பிரதிபலிக்கும்: "முதலாவதாக, இராணுவம் அவர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. பிறப்பால் முசல்மானாக இருக்கும் எவரும் நம்முடைய படையில் நுழைய முடியாது;..... பொதுத் துறை நிறுவனங்களில் முசல்மான்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கணிசமாக குறைந்தது..... முகம்மதியர்கள் ஒரு கூலியாக , தூது பணியாளராக, இங் பாட்டில் நிரப்புபவராக அல்லாமல் அதற்கு  மேலான பதவிகளில் வேலை செய்யும் அலுவலகங்கள் கொல்கத்தாவில் அரிதாகிவிட்டது.... உயர்நீதிமன்ற நீதிபதிகளில் இருவர் இந்துக்கள். முஸ்லிம்கள் யாரும் இல்லை. உண்மையில், ஒருகாலத்தில் நீதித்துறையின் ஏகபோக உரிமையாளர்களாக இருந்த சமூகத்திடம்  இருந்து அதை பிடுங்கியதன் நோக்கம், ஆங்கிலோ இந்தியர்களுடனும் இந்துக்களுடனும் இன்றிருக்கக்கூடிய  நினைத்துப் பார்க்க முடியாத சமரசம் தான்.... , சுருக்கமாக சொல்வதானால், முசல்மான்கள் மிக கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்கள், எந்த அளவிற்கு என்றால் , அரசு வேலைக்கு தகுயானவர்களாக இருந்தாலும், அரசின் பல்வேறு அறிவிப்புகளால் கவனமாக அதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார்கள். அவர்களின் ஆதரவற்ற நிலையை கவனிப்பாரும் யாருமில்லை. உயரதிகாரிகள் இவர்களின் இருப்பை ஒப்புக் கொள்வதற்குக் கூட தயாராக இல்லை... முஸ்லிம்கள் விவேகமானவர்களாக இருந்தால், அவர்கள் மாற்றத்தை உணர்ந்திருப்பார்கள், அவர்களின் இந்த விதியை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். "
 
மௌலானா ஹஸரத் மொஹானி, 
PHOTO: THE HINDU ARCHIVE
ஆக முஸ்லிம்கள் பிரிட்டிஷ் உடன் ஒத்துழைக்க எந்தமுனைப்போ ஆசையோ காட்டவில்லை. சர். செய்யது அஹமது கான், அவர்களை அரசியலை விட்டுவிட்டு கல்வியில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். பதுறுதீன் தியாஜி மற்றும் ஜின்னா போன்றவர்கள் காங்கிரசில் சேர்ந்து சுதந்திர இயக்கங்களை வலுப்படுத்தினர். முழூ சுதந்திரத்திற்கான முதல் தீர்மானம் 1921 இல் காங்கிரஸ் கூட்டத்தில் மௌலானா ஹஸரத் மொஹானி யால் வழங்கப்பட்டது, இவர் 'திலக்' நேசராக இருந்தார். அந்த தீர்மானம் இவ்வாறு சொல்லியது: "இந்திய தேசிய காங்கிரசின் நோக்கம் 'ஸ்வராஜ்' அடைவது - எல்லா அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் முழுமையான சுதந்திரத்தை அடைவது. அதை இந்திய மக்கள் அறவழியிலும் அமைதியான வழியிலும் அடைந்திட வேண்டும்." இதை காந்தி கடுமையாக எதிர்த்தார், அதன் ஆதரவாளர்கள் அலட்சியப்போக்குடன் இருப்பதாக குற்றம்சாட்டினார். அது முறியடிக்கப்பட்டது.
 
Dr.K.C.கந்தா வின் தொகுப்புகளில் ஏராளமான சுதந்திர பாடல்கள் இடம்பெற்றுள்ளது அவற்றில் முஸ்லிம்கள் எழுதியதும் உண்டு இந்துக்கள் எழுதியதும் உண்டு. அஷ்ஃபகுல் கான் எழுதிய ஒரு பாடலும் அதில் உண்டு. அஷஃபகுல் கான், கக்கோரி ரயில் கொள்ளை வழக்கில் தொடர்புடையதற்காக 1927 இல் தூக்கிலிடப்பட்டார்.
 
Dr.ஷம்சுல் இஸ்லாம், இந்திய பிரிவினைக்கு எதிரான முஸ்லிம்கள்' என்ற ஆவணத்தை  தொகுதித்துள்ளார். ''  (' Muslims against Partition of India' - Pharos Media, Jamia Nagar, New Delhi, pages 249, Rs.280). இந்த நூலுக்கு புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் ஹர்பன்ஸ் மகியா முன்னுரை எழுதியுள்ளார்.

முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தார்கள். சங்க பரிவாரம் அவர்களுடன் இணைந்து நின்றது. யார் "தேச விரோதி"? (Who is “anti-national”?) ஆதாரப்பூர்வ ஆவணங்கள் சுயம் பறைசாற்றுகின்றன.  இந்திய தேசியவாதத்தின் துரோகிகளான சங் பரிவாரம் இன்றுவரை அதைத் தொடர்கிறது. அதன் சேவகர் நரேந்திர மோடி இந்து தேசியவாதத்தை வளர்ப்பதற்காகஇந்திய 
தேசியவாதத்தைஅகற்றி வருகிறார். எல்லா நேரமும் அமெரிக்காவின் ஆதரவிற்காக ஏங்கி நிற்கிறார். பிரிட்டிஷின் இடத்தில் இப்போது அமெரிக்கா.

- A.G. Noorani | Published in "Frontline Magazine" Print edition November 2017 | Online Reference: https://goo.gl/HVb8U3

தமிழில்: முஹம்மது ரமீம்
The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.